காவல்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறை கட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதுகுறித்து போலீசார் மாணவன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் தனது மகளை மீட்க கோரி மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்கவும், மாணவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமூக வலைதளங்கள் மூலம் உருவாகும் அழுத்தம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றனர். மேலும் அவர்களை கைது செய்ததன் மூலம் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர் சந்துரு சட்டங்கள் உத்தரவுகள் எல்லாம் தெளிவாக உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளது என கூறினார். இதனை கேட்ட நீதிபதிகள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். மேலும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.