மராட்டிய மாநிலம் மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பானது அதிகளவில் பரவுகிறது. அதன்படி புதியதாக 30 நபர்களுக்கு தட்டம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து திரும்பி சென்று உள்ளனர். மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்குரிய அடிப்படையில் 156 நபர்களுக்கு புதியதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது.
இந்த வருடத்தில் இதுவரையிலும் மும்பையில் 233 நபர்களுக்கு இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 8 மாத ஆண்குழந்தை தட்டம்மைக்கு கடந்த செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்த நிலையில், மும்பையில் தொற்றுக்கான மொத்த உயிரிழப்பு 12 ஆக உயர்ந்துள்ளது. அக்குழந்தைக்கு சென்ற 20ம் தேதி உடல் முழுவதும் தட்டம்மை பரவி இருந்தது. அதன்பின் குழந்தை சிகிச்சைக்காக மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
எனினும் ஒரு சில மணி நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே காரணம் பற்றி முடிவுசெய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மும்பையில் கஸ்தூர்பா, சிவாஜிநகர், பாபாசாகேப் அம்பேத்கர், ராஜாவாடி, சதாப்தி, குர்லா பாபா, சாவித்திரி புலே, செவன் ஹில்ஸ் போன்ற 8 மருத்துவமனைகளில் இதன் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் இந்த வருடத்தில் தொற்று ஏற்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்களின் எண்ணிக்கையானது 3,534ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் புதியதாக 156 சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மும்பை மாநகராட்சியானது, காய்ச்சல் மற்றும் தொற்று இருப்பவர்களுக்கு வைட்டமின்-ஏ 2 டோஸ்கள் கொடுக்கப்படுகிறது. பின் 24 மணி நேரத்திற்கு பின் 2வது டோஸ் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.