அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலமாக ஓரியன் விண்கலத்தை கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிட்டபோது தொழில்நுட்ப கோளாறு மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இறுதியாக கடந்த 16ஆம் தேதி ஓரியன் விண்கலம் ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி தன்னுடைய பயணத்தை மேற்கொண்ட போது சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஓரியன் விண்கலம் 5 நாள் பயணத்திற்கு பின் தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. ஆர்டெமிஸ் விண்கலம் பயணத்தின் ஆறாவது நாளில் ஓரியன் தன்னுடைய நான்காவது சுற்று பாதை திருத்தத்தை துணை இயந்திரங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
மேலும் சுற்றுவட்ட பாதைக்குள் வருகிற 25-ம் தேதி ஓரியன் விண்கலம் செல்ல இருக்கிறது. அதன் பின் ஒரு வாரம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். இதனையடுத்து வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி ஒரியன் விண்கலம் பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசுபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டு இருக்கிறது. மேலும் நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான நிலை இருப்பதை தெரிந்து கொள்வதற்கான சோதனைக்காக மனித உடல்நிலை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட உள்ளது. இந்த பொம்மைகள் மூலமாக விண்ணில் உள்ள கதிர்வீச்சுக்களை மனித உடல்கள் எந்த அளவிற்கு தாங்குகிறது என்பது அறியமுடியும். மேலும் ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.