லாரி மோதிய விபத்தில் 2 மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுநர் வாகனத்தை வலது புறமாக திருப்பியுள்ளார். இதில் பள்ளிக்கூடம் முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவிகள் கூட்டத்திற்குள் லாரி புகுந்ததால் 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் லாரி சாலையோரம் இருந்த தடுப்பு கல்லை உடைத்துக் கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற லாரி ஓட்டுநரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த இரண்டு மாணவிகளையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுனர் கண்ணன் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து நடந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.