காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடந்து வரும் நிலையில், ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என்று மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடிதம் எழுதியவர்கள் யார்..? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அடையாளம் தெரியாத நபர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இது புரளி என்று சந்தேகிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விரைவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் யாத்திரையை துவங்க உள்ள நிலையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.