Categories
பல்சுவை

மகளிர் முன்னேற்றம் – மகளிர் தின ஸ்பெஷல்

மகளிர் முன்னேற்றம்

மாதர் போற்றும் மாந்தர்க்கு மாலைகள் தரவேண்டும் என்று பாடினர் கவிஞர் பெருமக்கள். மங்கையராய் பிறப்பதற்கே நல்மாதவம் செய்திடல் வேண்டும் என்றார் கவிமணி. பெண்ணைத் தாயாக கருதி வந்த பாரத நாட்டில் பெண்கள் அடிமைப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு  வருகிறார்கள் என்பது உண்மை. பெண்களை பெண்களே அழிக்கவும் முற்படுகிறார்கள் என்பது வேதனை.

பெண்ணின் நிலைமை:

புராதன காலத்தில் பெண்ணிற்கான பெருமை இருந்தது. அதனால்தான் தாய்நாட்டை நதிகளை பெண்ணின் பெயர் கொண்டு அழைத்தனர். சங்க காலத்தில் பல பெண் புலவர்கள் வாழ்ந்தனர் என்பதிலிருந்தும்  ஜான்சி ராணி ராணி மங்கம்மா போன்ற மகளிரின் வீர வாழ்க்கையில் இருந்தும் பெண்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்கினர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் காலப்போக்கில் இது மாறியது பெண்களின் மீதான அடக்குமுறை வளரத்தொடங்கியது.

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்ற கேள்வி வளர்ந்து பெண்களை அடிமைப்படுத்த தொடங்கினார்கள். கணவன் இறந்தால் அவன் மனைவியானவள் அவனோடு தீயில் குதித்து இறக்க வேண்டும் என்ற வழக்கம் சாதிப பெயரால் இருந்து வந்தது.  ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் அதை அரும்பாடுபட்டு அகற்றினார்கள். ஒரு குடும்பத்தில் ஆண் வகிக்கும் பொறுப்பை இன்று பெண்களும் வகிக்கிறார்கள்.

பல குடும்பங்கள் பெண்ணை நம்பியே நடக்கின்றன.  ஆனால் இன்றளவும் வரதட்சணை என்ற பெயரால் பெண்ணையும் கொடுத்து பொண்ணையும் கொடுக்கிறார்கள் அப்பெண்களில் பலர் புகுந்த வீட்டு பெண்களாலேயே கொடுமையும் படுத்தப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது. மனைவி இறந்தால் மணமகன் வேறு திருமணம் செய்து கொள்ளும் வேலையில் விதவைத் திருமணம் மறுக்கப்படுகிறது.

சமுதாயத்தில் பெண்மை:

இன்றளவும் சமுதாயத்தில் பெண்களுக்கு இரண்டாம் இடமே தரப்படுகிறது. நடு இரவில் ஒரு இளம் பெண் தனித்து வீதியில் நடந்தால் நாட்டில் அமைதி நிலவுகிறது என்று ஏற்றுக்கொள்வதாக காந்தியடிகள் கூறினார். ஆனால் பட்டப்பகலிலேயே பெண்களை சீரழிக்கும் ஆண்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. பல குடும்பங்களில் இன்றளவும் பெண் சிசுக்கொலை நடந்தவண்ணம் உள்ளன. பெண்களுக்கு போதிய கல்வி அறிவையும் குடும்பத்தினர் தருவதில்லை.

அதுபோல திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பெண்களை வெறும் போகப் பொருளாகவே சித்தரிப்பதும் வேதனைக்குரியதே. எங்களால் சாதிக்க முடியும் என பெண்கள் இன்று நிரூபித்தும் வருகிறார்கள். இருப்பினும் இன்றளவும் பெண்ணின் மீதான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. இதை யாராலும் மறுக்க முடியாது ஆனால் பல மகளிர் அமைப்புகள் தோன்றி கொடுமைகளை கேட்டும் அகற்றியும் வருகின்றன என்பது ஆறுதல் கூறிய செய்தி.

அரசு திட்டங்கள்:

அரசும் பல சட்ட திட்டங்களை கொண்டுவந்து  மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. மாநில அரசும் மத்திய அரசும் வரதட்சணை எதிர்ப்பு சட்டம், மகப்பேறு கால உதவி சட்டம், தொழிற்சாலை விதிகள், சாரதா சட்டம், சம ஊதிய சட்டம் போன்ற சட்டங்களை உருவாக்கி மகளிர் முன்னேற்றத்திற்காக ஊக்குவித்து வருகிறது.

அரசுத் துறைகளிலும் பாராளுமன்றத்திலும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அரசோடு சேர்ந்து பொதுமக்களும் மகளிருக்கு கல்வி, சம உரிமை போன்றவற்றை அளித்து மகளிர் உரிமையை காப்பாற்ற வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டும்.

Categories

Tech |