அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் நடக்கும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் மேற்கு பகுதியிலுள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒலி மாசுபாட்டிற்கு உரிய இழப்பீடு தர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ராணுவ தளத்தைச் சுற்றி சுமார் 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இராணுவ தளத்தில் விமானங்கள் மூலம் ஏற்படும் இரைச்சல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள், குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் செயல்பட்டு வரும் இந்த யோகோடா ராணுவ தளத்திற்கு எதிராக கடந்த 1976-ஆம் ஆண்டிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது 14-வது முறையாக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.