மிசோரமின் அய்சாவல் மாவட்டம் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று சென்ற அக்டோபர் 29-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து லாரியிலிருந்த பெட்ரோல் கசிந்து ஆறாக ஓடி இருக்கிறது. இதை பார்த்த அப்பகுதியில் வசித்தவர்கள் வாளி உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு பெட்ரோலை சேகரிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாரி திடீரென்று வெடித்து சிதறி, தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 10 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் ஒரு வாடகை காரும், 2 மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, இச்சம்பவத்தில் 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலுடன் சென்ற லாரி விபத்தில் சிக்கியுள்ளது. அதிகம் நெருப்பு பற்றகூடிய சூழ்நிலையில், மக்கள் பெட்ரோல் சேகரிக்க சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் லாரியின் அருகில் சாலையின் நடுவில் நின்றிருந்த நபர் ஒருவர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரை எரியவிட்டுள்ளார்.
அந்த நெருப்பு பரவிதான் லாரி வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ற 2-ஆம் தேதி அந்நபர் தனது தவறை ஒப்புகொண்டுள்ளார். கவனம் இன்றி நடந்துவிட்டது என அவர் கூறியுள்ளார். தற்போது அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு கொண்டுசென்றுள்ளோம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 11 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.