2 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு அன்னதானபட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் சசிகுமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக அரவிந்த்குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி அரவிந்த் குமார் உட்பட சிலர் கடந்த 2015-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளாக சசிகுமாரிடம் 2 கோடியே 83 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர்.
ஆனால் கூறியபடி அவர் வேலை கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது சசிகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அரவிந்த் குமார் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் சசிகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகமது உஸ்மான் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.