தமிழக அரசால் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வுதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத்திட்ட உதவி தொகை போன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீடுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது அல்லது வீட்டுமனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழாக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் 10,000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமான ரூ.4 லட்சம் வரை வீட்டு வசதி திட்ட உதவித்தொகை வழங்கும் ரூ.400 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்திடும் வகையில், முதல் கட்டமாக 104 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி வீட்டு வசதி திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதனையடுத்து முதல்வரின் அறிவுரைக்கேற்ப வாரியத்தில் நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் விரைந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலத்துறை வாரிய தலைவர் பொன்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.