ஷ்ரத்தா என்ற பெண்ணும், அப்தாப் என்பவரும் மும்பையிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின், அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்களது காதலுக்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி டெல்லிக்கு ஓடி அங்கு மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசிக்கத் துவங்கினர். இந்நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
சென்ற மேமாதம் அப்தாப், ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார். அதன்பின் ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக அப்தாப் வெட்டினார். பின் அப்தாப் ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி வெட்டப்பட்ட ஷ்ரத்தாவின் உடலை 18 நாட்களாக வைத்து டெல்லி முழுதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்துள்ளார். இந்நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் சமூகவலைதளங்கள் வாயிலாக அவர் இருக்கும் இடத்தை அறிந்தனர்.
அதனை தொடர்ந்து ஷ்ரத்தாவின் தந்தை அவரை பார்க்க டெல்லிக்கு வந்தார். இருப்பினும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதற்கிடையில் காவல்துறையினர் ரகசிய தகவலின் படி அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.