தமிழகத்தில் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவு 937.50 மி.மீ. இதில் 448 மி.மீ. மழையளவு இயல்பாக வட கிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வட கிழக்கு பருவ மழையின் போது வெப்பமண்டல சூறாவளி மற்றும் அதனுடன் தொடர்புடைய புயல்கள் காரணமாக மாநில அதிகபட்ச பேரிடர்களை சந்திக்க நேரிடும். நடப்பாண்டின் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் நவம்பர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. எனவே விளைநிலங்களில் உள்ள சிறு பாசனம் மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றிட வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் போது வெள்ளம் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிட வேண்டும். வெள்ள மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளிதல், களைக்கொல்லி இடுதல் போன்றவை தவிர வேண்டம். அதனைப் போல நீர்மூழ்கியுள்ள பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய மழை நின்று நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் மழை காலத்தில் புகையான் பூச்சி தாக்குதல் பொருளாதார தேச நிலைக்கு மேல் செல்லும் போது வேம்புசார்ந்த பூச்சி மருந்தாகிய அசராடிராக்டின் 0.03% மருந்தினை ஒரு எக்டருக்கு 1000மிமி என்ற அளவில் வேளாண் துறையில் பரிந்துரையின் படி உபயோகப்படுத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நவம்பர் 15 ஆம் தேதி சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட கடைசி நாள் என்பதால் நிர்ணயத்தை தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 5,908 வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் மழை வெள்ள நிலையை கண்காணித்து தகுந்த அறிவுரை வழங்கி விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக களத்தில் பணியாற்ற வேண்டும் என்று தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.