வட கிழக்கு மாநிலங்களில் வரும் 2024ம் வருடத்திற்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “வட கிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. அந்த வகையில் இப்போது நடந்துவரும் திட்டங்கள் மற்றும் இனி நடைபெறவுள்ள திட்டங்களை கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய்.3 லட்சம் கோடியாக இருக்கும்.
இத்திட்டங்கள் அனைத்தும் வரும் 2024-ம் வருடத்திற்குள் நிறைவேற்றப்படும். சாலை பணிகளை தவிர்த்து, பாலங்கள், தளவாடங்கள், கயிறுபாதைகள் மற்றும் வழியோர வசதிகளுக்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துதல் குறித்த பிரச்சினை மற்றும் வனத்துறை அனுமதி போன்ற பிரச்சினைகளை மாநில அரசுகள் உரிய நேரத்தில் தீர்த்துவைத்தால், மேலும் ரூபாய்.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை இப்பகுதிக்கு ஒதுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.