செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அண்மையில் 23.10.2022 அன்று கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு வெடிக்கப்பட்டது. இது ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி 18.10.2022 அன்று மாநில அரசுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீவிரவாத செயல் நடைபெறும் என்ற செய்தியை மாநில அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த விடியா திமுக முதலமைச்சர் அவர் தலைமையில் இருக்கின்ற ஆட்சி, இருக்கின்ற உளவுத்துறை, காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அரசினுடைய வழிகாட்டுதலை கடைபிடிக்காத காரணத்தினாலே 23.10.2022 அன்று கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இந்த சிலிண்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கின்றது, அதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி முறையாக மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தும், அந்த தகவலின் அடிப்படையில் உளவுத்துறை எச்சரிக்கையாக இருந்து கவனமாக இருந்து செயல்பட்டிருந்தால் இதை கண்டுபிடித்திருக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் போய்விட்டது. இதே மக்கள் அதிகம் இருக்கின்ற பகுதியில் இந்த சிலிண்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருந்தால் பல பேர் உயிரிழக்க நேரிட்டிருக்கும். தீவிரவாதம் என்று சொன்னாலே, அதிகமாக எங்கெங்கு நடைபெறுகிறது என்று உளவுத்துறைக்கு தெரியும். அதை உரிய முறையில் கவனம் செலுத்தி, தடுத்து இருக்கலாம். இதையெல்லாம் உளவுத்துறை தவறிவிட்டது. இந்த அரசு ஒரு திறமையற்ற அரசு என்பதை நிரூபணம் ஆகி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இறந்தவுடன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெற்றோர்கள் முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட 17ஆம் தேதி வரை இதற்கு எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
உளவுத்துறை இந்த மர்மமான முறையிலே மாணவி இருந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்காது. வன்முறை நிகழ்வு இருக்காது, பள்ளி தீக்கரையாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு இந்த விடியா திமுக அரசு முதலமைச்சர்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.