போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், இயந்திரக் கோளாறு, கவனக்குறைவுடன் வாகனத்தை இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அபராத தொகையை அதிகரிப்பதன் மூலம் அதனை அமல்படுத்தும் காவல் துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவார்கள் எனவும், அபராத தொகையை உயர்த்தும் முன் அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவானது இன்றைய தினம் சென்னை நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது, இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையானது அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.