கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக நிலுவை தொகையினை செலுத்த வேண்டும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை குறைவான மாத சந்தா தொகையில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த சேவையை தமிழக அரசு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தம் பெற்று உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்களது இணைப்புகளை முழுமையாகவா அல்லது பாதியாகவோ வேறு எந்த ஒரு நபருக்கும் விற்கவோ அல்லது மாற்றம் செய்யவும் கூடாது எனவும் சூழ்நிலை காரணமாக வேறு ஒரு நபருக்கு விற்பனை அல்லது மாற்றம் செய்தால் உடனே முறையாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை அடுத்து துணை மேலாளர் வாயிலாக பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தினுடைய செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அவற்றை திரும்ப உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 397 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனலாக் நிலுவைத் தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.