திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தள்ளாடியபடி நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அவர் தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயன்ற போது அந்த நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில், அவர் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் வசிக்கும் பெயிண்டரான ஜெபாஸ்டின் விமல்ராஜ்(43) என்பது தெரியவந்தது. உறவினர்களுக்கும், விமல்ராஜுக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக விமல்ராஜ் தெரிவித்தார். அப்போது பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.