பழனி அருகே செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் இதுநாள் வரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செல்வ விநாயகர் கோவில், உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் இனத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற கிளை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர், புகாருக்குள்ளான மோதில்ராம், சின்னசாமி, ராமசாமி பதில் தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர், கடவுள் வழிபாட்டில் சாதிய பாகுபாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்கில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.