டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி..
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி முதல் விளையாடி வருகிறது.. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 44 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 64 ரன்களும், கே.எல் ராகுல் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்தனர். மேலும் சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணியின் துவக்க வீரர்களாக சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். இதில் ஷாண்டோ பொறுமையாக ஆட தாஸ் அதிரடியில் மிரட்டினார். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வங்கதேச அணி எடுத்திருந்தது. அதன் பின் அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரிகளை லிட்டன் தாஸ் விளாசினார்.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரில் புவனேஷ்வர் குமாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என விளாசி அதிரடியாக ஆடினார். அதன் பின் ஷமி வீசிய 6ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரி என அதிரடியாக விளாசி அரைசதம் அடித்தார். தாஸ் 26 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்சர்) 59 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் ஷாண்டோ 16 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்தார். 7 ஓவரில் வங்கதேச அணி 66 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.
பின் மழை நின்ற நிலையில் மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே 66 ரன்கள் எடுத்துள்ளதால் வெற்றிக்கு 9 ஓவரில் 85 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதையடுத்து லிட்டன் தாஸ் மற்றும் சாண்டோ இருவரும் களமிறங்கினர்.
இதையடுத்து அஸ்வின் வீசிய 8ஆவது ஓவரில் ரிட்டன் தாஸ் கேஎல் ராகுலால் ரன் அவுட் செய்யப்பட்டார். லிட்டன் தாஸ் 27 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்சர்) 60 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து முகமது ஷமி 10ஆவது ஓவரில் ஷாண்டோவை (21) அவுட் செய்தார். அதன்பின் அர்ஷ்தீப் சிங் தனது 12 வது ஓவரில் 2 ரன் மட்டுமே கொடுத்து அஃபிஃப் ஹொசைன் (3) மற்றும் ஷகிப் அல் ஹசன் (13) இருவரது விக்கெட்டையும் எடுத்து அசத்தினார்.
பின் 13 வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து யாசிர் அலி (1) முசாடெக் ஹொசைன் (6) இருவரையும் பாண்டியா அவுட் செய்தார். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டபோது, நூருல் ஹசன் மற்றும் தஸ்கின் அகமது களத்தில் இருந்தனர்.. 14ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 12 ரன்கள் கொடுத்தார். கடைசி 2 ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய அந்த 15 வது ஓவரில் தஸ்கின் அகமது ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பாண்டியா அந்த ஓவரில் 11 ரன்களே கொடுத்தார். கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் தஸ்கின் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் நூருல் ஹசன் ஒரு சிக்ஸர் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்றாவது பந்தில் யார்க்கர் வீசி ரன் கொடுக்கவில்லை. 4 ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். கடைசி 2 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது, அந்த பந்தை பவுண்டரி அடித்தார் நூருல் ஹசன்.. கடைசி ஒரு பந்தில் 7 ரன்கள் தேவைப்பட ஆட்டம் திக் திக் ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன்னே கொடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 16 ஓவர் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. நூருல் ஹசன் 25(14) ரன்களுடனும், தஸ்கின் 12 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்..