தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
டெல்லி புறநகர் ஆன கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏழாவது இந்திய தண்ணீர் வார விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்து பேசும்போது தண்ணீர் பிரச்சினை பல முகங்களை கொண்ட சிக்கலானது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் வரம்புக்குட்பட்டது என்பதை அனைவரும் தெரிந்திருக்கின்றோம். மேலும் சரியான பயன்பாடு, தண்ணீர் மறுசுழற்சி போன்றவற்றின் மூலமாக மட்டுமே தண்ணீர் வளத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக்கொள்ள முடியும்.
அதனால் தண்ணீரை நாம் அனைவரும் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். மேலும் தண்ணீர் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது வாழ்க்கையில் தண்ணீர் முக்கியமானது மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு பிந்தைய பயணத்திலும் தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. அதனால் தான் எல்லா தண்ணீர் ஆதாரங்களும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலைமையை பார்த்தால் மிகவும் மோசமாக இருக்கிறது கிராமத்தில் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது பல உள்ளூர் ஆறுகள் அழிந்து போய்விட்டது.
விவசாயத்தாலும் தொழிற்சாலைகளாலும் தண்ணீர் அதிக அளவில் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் பூமியில் சுற்றுச்சூழல் சமநிலைக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. வானிலை முறைகள் மாறி வருகிறது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தண்ணீர் மேலாண்மை விவாதம் என்பது மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கையாகும். இந்த நிலையில் தண்ணீர் பிரச்சனை என்பது இந்தியாவிற்கு மட்டுமானது அல்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆனதாகும் நமது நாட்டில் 80 சதவிகித தண்ணீர் வளம் விவசாயத்திற்கு தான் செல்கிறது.
அதனால் தண்ணீரை சரியாக பயன்படுத்துவதும் நீர் பாசனத்தில் தண்ணீர் மேலாண்மையும் நமது தண்ணீரின் பாதுகாப்பில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பெருகிவரும் மக்கள் தொகைக்கு தூய்மையான தண்ணீர் தருவது இனி வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பொதுமக்கள் விவசாயிகள் தொழிலதிபர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பின மக்களும் தங்கள் அறநிலையில் இருந்து தண்ணீர் பாதுகாப்பை ஒரு அங்கம் ஆக்கிக் கொள்ள வேண்டும். மேலும் விஞ்ஞானிகள் நகர திட்டமிடுபவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் தண்ணீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு உதவும் தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் தண்ணீர் பாதுகாப்பில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.