காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் பல்வேறு இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொது சொத்துக்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதாக மத்திய மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த மாதம் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தவும் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்டது. மேலும் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி கூறி இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு , ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விதித்து நவம்பர் 6-ஆம் தேதி ஊர்வலம் நடத்த அமைப்புக்கு அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையர், கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டார் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் தற்போதைய சூழ்நிலை கருத்தில் கொண்டு அனுமதிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவை மீறி பல மாவட்டங்களில் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்க வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை நாளை தள்ளி வைத்து நீதிமன்ற உத்தரவின்படி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.