அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஆகும்.
எனினும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை வருடகாலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என சொல்லிக்கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது. இப்போது 01/07/2022 முதல் மேலும் 4 % அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள சூழ்நிலையில், வழக்கம் போல் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக இருக்கிறது.
ஆகவே முதல்வர் ஸ்டாலின் இதில் உடனே தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 % அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதம் ஆக 01/07/2022 முதல் உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் ஓ.பன்னீர்செல்வம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.