கடலூரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைபபோல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் அவரை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களிலும் பலர் கூறினர்.
இந்த நிலையில் கோவை கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கு வழிபாடு செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கடலூரில் பத்திரிகையாளர்கள் பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்புக்கேட்க வேண்டும் என சில பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அண்ணாமலை, பத்திரிகையாளர்களை மரியாதை, நேர்மை மற்றும் நியாயமாக 99% நடத்துகின்றவன் நான்.
தங்களுக்கு நியாயமான கோபம் ஒருசில பத்திரிகையாளர்களின் மீது உள்ளது. அவர்கள் தவறான செய்திகளை பதிவிடுவது தான் அதற்கு காரணம் ஆகும். ஆகவே நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன். தவறு செய்யாத போது நான் எதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அதன்பின் எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது. அண்ணாமலை தவறு செய்து விட்டதாக நீங்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நான் தவறு செய்யவில்லை. இதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று பேசிவிட்டு சென்றார். தற்போது அண்ணாமலையின் இப்பேச்சும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.