புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள் வரும் மார்ச் 5ம் தேதி ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் 10 கண்காணிப்பு செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக ஜி-சாட்-1 செயற்கைக்கோள்வருகிற மார்ச் 5ம் தேதி, மாலை 5.43 மணிக்கு, ஜிஎஸ்எல்வி.-எஃப்10 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஜி-சாட்-1 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்14வது முறையாக விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
275 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், புவியை கண்காணிக்கவும், வானிலை ஆய்வுகளுக்காகவும் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் ஜி-சாட்-2 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.