வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி.
டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர்..
இதில் பவுமா 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூஸோவ் மற்றும் டிகாக் இருவரும் ஜோடி சேர்ந்து வங்கதேச பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். இதனால் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் ரன்ரேட் சென்று கொண்டே இருந்தது. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களுக்கு மேல் கடந்து சென்றது. இருவரும் அரைசதம் அடித்திருந்த நிலையில், 15 வது ஓவரில் 38 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்சர்) 63 ரன்கள் எடுத்திருந்த டி காக் அவுட் ஆனார். 2ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 163 ரன்கள் சேர்த்தது.
அப்போது தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 14.3 ஓவரில் 170/2 என்று இருந்தது. அதன்பின் ரூஸோவ் தனது இரண்டாவது டி20சதத்தை பதிவு செய்தார். இதனால் எப்படியும் தென் ஆப்பிரிக்கா அணி 230 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததே வேறு.. அதன் பின் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17ஆவது ஓவரில் 7 ரன்னில் அவுட் ஆக, சதம் விளாசிய ரீலி ரூஸோவ் 56 பந்துகளில் 109 ரன்கள் (7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்) எடுத்த நிலையில் 19 ஆவது ஓவரில் அவுட் ஆனார். எதிர்பார்க்கப்பட்ட எய்டன் மார்க்ரம் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார்.
இதனால் ரன் ரேட் குறைந்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. டேவிட் மில்லர் 2 ரன்களிலும், பார்னெல் 0 ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் சௌமியா சர்க்கார் இருவரும் களம் இறங்கினர். முதல் இரண்டு ஓவருக்கு அதிரடியாக 26 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேச அணி. அதன்பின் அன்ரிச் நார்ட்ஜே வீசிய 3ஆவது ஓவரின் முதல் பந்தில் சாண்டோ 9 ரன்னில் போல்ட் ஆக, அதனைத் தொடர்ந்து அதே ஓவரின் 4ஆவது பந்தில் சௌமியா சர்க்கார் 15(6) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஷகிப் அல் ஹசன் 1, அஃபிஃப் ஹொசைன் 1, மெஹிதி ஹசன் 11, மொசாடெக் ஹொசைன் 0, நூருல் ஹசன் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் லிட்டன் தாஸ் மட்டும் பொறுமையாக ஆடி கொண்டிருந்தார். 12 ஓவரில் 76/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை நெருங்கியது வங்கதேச அணி. அதன்பின் 14ஆவது ஓவரில் லிட்டன் தாஸ் 34 (31) ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹசன் மஹ்மூத் 0 ரன்னில் ரன் அவுட் ஆக, தஸ்கின் அகமது 10 ரன்னில் அவுட் ஆனார்.. இறுதியில் 16.3 ஓவரில் 101 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல் அவுட் ஆனது. முஸ்தாபிசுர் ரஹ்மான் 9 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார்.. இதனால் 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக நார்ட்ஜே 4 விக்கெட்டுகளும், தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்..