சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் நொச்சிக்குப்பத்தில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மணல்பரப்பில் ஒரு கைதுப்பாக்கி கிடப்பதை அவர் பார்த்தார். அதன்பின் அந்த துப்பாக்கியை சுரேஷ் எடுத்து பார்த்தார். அதனை தொடர்ந்து கலங்கரை விளக்கம் அருகில் கடலோர பாதுகாப்பு குழுவின் உயிர்காக்கும் பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஆரோக்கியராஜ்ஜிடம் சுரேஷ், அத்துப்பாக்கியை கொடுத்தார். அதன்பின் காவலர் ஆரோக்கியராஜ் துப்பாக்கியை, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
அடுத்ததாக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக மெரினா போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கைத்துப்பாக்கியை மெரினாவில் போட்டு விட்டு சென்ற நபர் யார்..? என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கியின் லைசென்ஸ் உள்ளிட்ட விவரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர்.