பாதுகாப்பு தடுப்பு வேலி அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பல பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள் `சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை பகுதியிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முத்துகிருஷ்ணன் என்பவர் அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். இப்போது திடீரென அவர் தவறி தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக நேற்று உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து முத்துகிருஷ்ணன் என்பவர் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து மாநகராட்சி சம்பந்தப்பட்ட துறை அதிகாரி சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வரும் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அவசர வாய்மொழி உத்தரவை நேற்று பிறப்பித்திருக்கிறது. அதில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களில் பாதுகாப்பு தடுப்பு வேலிகளை அமைத்து தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு தடுப்பு வேலி மேற்கொள்ளப்படுவதற்கான விவரங்களை புகைப்படங்களாக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.