மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் வெண்மனம் புதூர் பகுதியில் ஆனந்தவேல்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தவேல் வேலை முடிந்து நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது பேரம்பாக்கம் நோக்கி வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தவேலை பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆனந்தவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.