தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு முதியவர் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் மணிமுத்தா ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அகரம் சீகூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லம்மாள்(60) என்பது தெரியவந்தது. அங்கன்வாடியில் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற நல்லம்மாள் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மூதாட்டியை கோவிலுக்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்த பிறகு மூதாட்டி அணிந்திருந்த 29 கிராம் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.