கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படும் என காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில், அலுவல் நேரம் முடிந்த பிறகு இரவில் கடைவீதிகளுக்கு வந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்கு வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் 18.10.2022 ஆம் தேதி கோவை மாநகர காவல் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார தளங்களும் இரவு ஒரு மணி வரை செயல்படும். மேலும் பொதுமக்கள் வியாபார தளங்களுக்கு வருகை புரிந்து இரவு 1 மணி வரை பொருள்களை வாங்கி செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கு இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.