கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை கனரக லாரி ஒன்று ஏற்றுக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லாரி நேற்று காலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியின் இடது பக்கம் முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் ஏற்றி கொண்டுவரப்பட்ட இரும்பு தகடுகள் அனைத்தும் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரின் வாகனத்திற்கு அருகே சரிந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பின் மீண்டும் அங்கு வந்த போலீசார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் போலீசார் நூலிலையில் உயிர்த்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.