திருமணமான 1 1/2 வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தூர் செல்வகணபதி நகரில் கிஷோர்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றத்தூர் பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிஷோர் ரோஜா(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மாதத்தில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பெற்றெடுப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரோஜா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் கிஷோர் வேலைக்கு சென்ற பிறகு அவரது மாமியார் அம்சவேணி ரோஜாவை வீட்டில் இருக்கும் வேலைகளை ஒழுங்காக செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்
இதனால் ரோஜா தனது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு என்னை வேலை செய்ய சொல்கிறார்கள் என கூறி அழுதுள்ளார். இதனை அடுத்து அறைக்கு சென்ற ரோஜா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அம்சவேணி தனது மகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்படி வீட்டிற்கு வந்த கிஷோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.