தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டம் இடம்பெறவில்லை. எனவே அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் மேற்கண்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்து இனி வரும் பருவ தேர்வுகளில் தவறாமல் நடைமுறைப்படுத்த ஏதுவாக அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை அரசுக்கு உடன் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு இனிவரும் பருவ தேர்வுகளில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.