பிரதமர் நரேந்திர மோடி ஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான 8ஆவது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இன்று வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 மற்றும் ஓஷதி ரணசிங்க 13 ரன்கள் எடுத்தனர்..
இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளும், ராஜேஸ்வரி மற்றும் சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 8.3 ஓவரில் 2 விக்கெட் இழந்து 71 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 25 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 51* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது.
இந்திய அணி 7ஆவது முறையாக கோப்பையை வென்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அவர்களின் திறமையால் எங்களை பெருமைப்படுத்துகிறது! மகளிர் ஆசிய கோப்பையை வென்ற அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் சிறந்த திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளனர். வீரர்களின் வரவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
Our women cricket team makes us proud with their grit and dexterity! Congratulations to the team for winning the Women’s Asia Cup. They have shown outstanding skill and teamwork. Best wishes to the players for their upcoming endeavours. https://t.co/6hq5V08Cy9
— Narendra Modi (@narendramodi) October 15, 2022