கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது.
உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த பகுதியில் வருவாய் துறை, மருத்துவ துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் அனைவரும் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷவாயு எங்கிருந்து வந்தது ? இதற்கு என்ன காரணம் ? என்று இதுவரைக்கு தெரியவில்லை. எனவே பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்த ரத்த பரிசோதனையில் என்ன காரணம் என தெரியவரும் ? என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.