தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “காலை 6 -7 மற்றும் மாலை 7-8 மணி வரையிலான 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். தீவிபத்து மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும்” என்றார்.