Categories
மாநில செய்திகள்

இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா?….. இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா?….. தமிழகம் முழுவதும் 15ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா? இந்திய ஒன்றியத்தை துண்டாட துடிப்பதா? இந்தி திணிப்பு திட்டத்தையும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கழகத் தலைவரின் ஆணையேற்று திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, மாணவர் அணி செயலாளர் சி.வி எம்.பி எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

இந்திய துணை கண்டத்தின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ் இன் சித்தாந்தத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முற்படுகிறது. இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைத்து ஒருமை தன்மையாக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள அறிக்கையில் (11 வது தொகுதி) ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களான உயர் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழிக் கல்வியே கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியை படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி இந்தியா முழுவதும் இந்தியை கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த முற்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமை கொண்ட மொழிகள் ஆகும் என்று ஒன்றிய பாஜக அரசுக்கு நினைவுள்ளதா?

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது, அனைத்து பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் உள்ள கல்லூரிகளின் அனைத்து பாடத் துறைகளுக்கும், தேசிய தேர்வு முகமை மூலமாக ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதும், மாநில உரிமைகளை பறிக்கக் கூடியதாகவும், சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இது அனைவருக்குமான சம உரிமை -சம வாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் திராவிட முன்னேற்ற கழகம் கடுமையாக எதிர்க்கிறது.

ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வி முறையில் தொடங்கி, உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்ற நிலையோடு, ஒன்றிய அரசின் பணியில் சேர பொது தேர்வுகளின் மொழியும் ஹிந்தி மட்டுமே இருக்கும் என்ற நிலையும் பணியில் சேர்ந்த பிறகும் இந்தி மட்டுமே ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இருக்கும் என்ற நிலையை கட்டமைக்க பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு.

பழமொழி கொண்ட இந்திய துணை கண்டத்தில் அவரவர் மொழி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பன்முகத்தன்மையை சிதைத்து விட்டு இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டு வருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இத்திட்டத்தை திமுக இளைஞர் அணியும் மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது.

எனவே அலுவல் மொழி சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கழகத் தலைவர் தளபதி அவர்கள் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை கைவிட வேண்டும் என்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்ப பெற வலியுறுத்தியும், கழகத் தலைவரின் ஆணை ஏற்று, திமுக இளைஞரணியும் மாணவர் அணியும் இணைந்து, வரும் 15.10.2022 அன்று சனிக்கிழமை காலை 9 மணி அளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கிறது.

இதில் திமுக இளைஞர் அணி – மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணித் தோழர்களும், மாணவர் அணித் தோழர்களும் பெருந்திறளாக கலந்து கொண்டு, குமரி ஒலிக்கும் நமது கண்டன குரல் செங்கோட்டையில் அமர்ந்திருக்கும் ஒன்றிய பாஜக அரசின் செவிப்பறையை கிழிக்க செய்திட அடலேருகளே அணி திரண்டு வாரீர்.. வாரீர்.. என அன்புடன் அழைக்கிறோம்.

Categories

Tech |