இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள சல்மான்கான் ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளமும், லாபத்தில் பங்கும் வாங்குகிறார். அண்மையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததால் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொண்டு சுற்றுகிறார். இந்நிலையில் தனக்குப்பிடித்த விஷயங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சல்மான்கான் பேட்டி அளித்தபோது ”நான் பல தோல்விகளை எதிர் கொண்டேன்.
அதில் இருந்து வெளியே வருவதற்கு வேகமாக முயற்சி செய்வேன். என்னை யாராவது கடுமையாக விமர்சனம் செய்தாலும், கேலிசெய்தாலும் வீட்டில் இருந்து வெளியே வந்து என்னை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்படும் என் ரசிகர்களுடன் சிறிதுநேரம் உரையாடுவதற்கு முயற்சி செய்வேன். அவ்வாறு அவர்களுடன் பேசும் போது எனக்கு அவர்கள் கொடுக்கும் கவுரவத்தின் முன்பு விமர்சனங்கள் எல்லாம் தூசுக்கு சமம் என தோன்றும்.
படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த இடமான பன்வேலிலுள்ள என் பண்ணை வீட்டுக்கு சென்று சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, பெயிண்டிங், எக்சர்சைஸ் செய்வது, பட்டங்களை பறக்க விடுவது என நேரத்தை செலவழிப்பேன். ஒருவேளை நான் திரையுலகில் நடிக்க வராமல் இருந்திருந்தால் ஒரு எழுத்தாளராகவோ, நீச்சல் வீரராகவோ ஆகியிருப்பேன்” என்று பேசினார்.