ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது நேற்று காலை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைத்துள்ளார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது நேற்று காலை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒரு லாரியில் வெடிபொருட்களை நிரப்பி அதை வெடிக்க செய்துள்ளனர். இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்பொழுது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீதும் தீப்பொறி பறந்து பற்றி கொண்டது. இந்த ரெயிலில் 7 எரிபொருள் அடங்கிய பெட்டிகள் தீப்பிடித்து கொண்டன.
இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டு வெடிப்புக்கு காரணமான அந்த வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் என்று ரஷ்யாவின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரிமியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டினார். இருப்பினும் உக்ரைன் தரப்பு இதற்கு பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் கூறியதாவது, “சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்பட வேண்டும், திருடப்பட்ட அனைத்தும் உக்ரைனுக்குத் திரும்ப வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும்” என்று அவர் டுவீட் செய்துள்ளார்.