புதுச்சேரியில் இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் கட்டாயம், மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் விபத்தினை தவிர்க்கும் :
முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் அனுதினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் புதுச்சேரியில் நான்கு பேரும் மற்றும் காரைக்காலில் ஒரு சிறுவனும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லும்பொழுது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது. இவ்வாறு பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்தல் அவசியம். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வது வாகன விபத்தில் தலைக்கு காயம் ஏற்படுவதை 80% சதவீதம் தடுக்கிறது. கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரையில் மட்டும் தலைக்கவசம் அணியாததன் காரணமாக 181 பேர் இறந்துள்ளனர்.
இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது அத்துடன் தரமான தலை கவசத்தினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும்போது கைபேசி உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50% சதவீதம் குறைக்கும் என்பதால் எந்த வாகனம் ஓட்டும் பொழுதும் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசுபவருக்கும், தலைக்கவசம் அணியாது இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல் முறை ரூபாய் 1000 அபராதம் மட்டுமின்றி 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவோர் வாகன விபத்தினை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்போம்.
புதுவையில் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை. இச்சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் மற்றும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் 12 மாதம் வரை ரத்து செய்யப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும். எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தகுதியான தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, அலைபேசியில் (மொபைல்) பேசிக் கொண்டு ஓட்டுவது தவறான திசையில் ஓட்டுவது இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லாமல் சாலை விபத்துகளை தவிர்க்குமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்துகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.