மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் சென்ற மாதத்தில் மட்டும் 11 அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையானது குறைந்து இருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார். சென்ற மாதம் 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 2 -11 % வரை குறைந்ததால், மாத பட்ஜெட்டில் மிகப் பெரிய நிம்மதியை மக்கள் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தெந்த பொருள்களின் விலை குறைந்தது என்ற பட்டியலும், அதன் செப்டம்பர், அக்டோபர் மாத விலை நிலவரங்கள், எந்த அளவுக்கு விலை குறைந்துள்ளது என்ற பட்டியலையும் சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து நாட்டு மக்களுக்கு விளக்கி இருக்கிறார். அதில் முதலிடத்தில் இருப்பது பாமாயில். செப்டம்பர் 2ம் தேதி 1 லிட்டர் பாமாயில் 132 ஆக இருந்த நிலையில், 11 % விலை குறைந்து ரூ.118க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வனஸ்பதி விலையானது 6 % சரிந்து 1 கிலோ ரூ.152ல் இருந்து தற்போது ரூ.143க்கு விற்பனையாகிறது. சூரிய காந்தி எண்ணெய் விலை 6 % அதாவது 1 லிட்டர் ரூ.176க்கு விற்பனையான நிலையில், அது ரூ.165க்கு தற்போது விற்பனையாகிறது. வெங்காயம் விலையும் 1 கிலோ ரூ.26க்கு விற்ற நிலையில், இப்போது ரூ.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக் கிழங்கு 28 ரூபாயில் இருந்து 26 ரூபாயாகவும், பருப்புகளின் விலையும் குறைந்திருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.