விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் குறும்பட ஆவண கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக் காணது என்று கூறினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நம்மிடமிருந்து அடையாளங்களை பறித்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், இராஜராஜ சோழனை இந்து அரசன் ஆக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிந்து வரும் நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரரசு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, இந்து மக்களை இழிவு படுத்தி பேசுவதையே தற்போது சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள். இந்து மதத்தை பற்றி பேசும்போது நாங்கள் பதில் அளித்தால் உடனே எங்களை மத வெறியர்கள் என்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்து மன்னராக மாற்றி விட்டார்கள் என்று வெற்றிமாறன் கூறினார். இப்போது நான் கேட்கிறேன். ராஜராஜ சோழன் இந்து மன்னன் இல்லாமல், ஒரு கிறிஸ்தவரா? இல்லை என்றால் முஸ்லிமா?
நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு தான் தற்போது இந்தியா என்ற ஒரே நாடாக மாற்றியுள்ளனர். உலக அளவில் இந்தியா ஒரு தலைசிறந்த நாடாக திகழ்கிறது. சைவம், வைணவம் ஆகியவைகள் இந்து மதம் தான். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து தான் இந்தியா என்கிறார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து சாமியையும் ஒரே சாமியாக தான் நினைத்து கும்பிடுகிறார்கள். ஒருவேளை உங்களுக்கு சாமி கும்பிடுவதற்கு பிடிக்கவில்லை என்றால் எதற்காக இந்துக்களை பற்றி பேசுகிறீர்கள். நாத்தீகம் பேசுபவர் மனிதரே இல்லை என்று கூறியுள்ளார்.