சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உள்ள தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயிர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்து கொள்ள 31,094 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில் விருப்ப பாடம் மற்றும் கல்லூரிகளை 23,458 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு சென்று சேர வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 14,153, பொறியியல் சேவை மையங்களுக்கு சென்று சேர வேண்டியவர்கள் 5,016 பேராகும். மேலும் மேல் நோக்கி நகர்வுக்காக 4,289 மாணவர்கள் காத்திருக்கின்றனர். மூன்றாவது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும். பொறியியல் கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நடைபெறும்.
அதனை தொடர்ந்து பி.ஆர்க் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்படும். தொடர்ந்து வருகின்ற 8 ஆம் தேதி முதல் அதன் கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும். நான்கு கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும். அக்டோபர் மாதம் இறுதியில் முதலாம் ஆண்டு பொறியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும். நீட் தேர்வு போன்ற காரணங்கள் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும். மாநில கல்விக் கொள்கையை குழு அறிக்கை ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.. அதன் பிறகு ஓசி பேருந்து என பேசிய விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், விளையாட்டாக பேசியதை தவறாக புரிந்து கொண்டனர் என்று விளக்கம் அளித்தார்.