Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட நிலமோசடி வழக்கு ரத்து…. ஐகோர்ட் உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் ஆகிய 3 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன்வள உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் குமாருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருமகன் நவீன் குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தன்மீதான வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2016 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021 ஆம் ஆண்டுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என புகார்தாரரான மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இன்று பிறப்பித்த உத்தரவில் நில அபகரிப்பு புகாரில்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் ஆகியோர் 3 பேர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |