சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் கூறி உள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் பொருத்தவரையில் சராசரியாக தற்போது 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயனடைகிறார்கள். இதில் பெரிதும் பயன்பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்களாவர். இவர்களுக்கு 20% வரை கட்டண சலுகையும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் ரயில் நிலையம் அருகே இருக்கும் கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சென்று கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றார்கள். இதற்காக ஐந்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளளை அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசி உள்ளார்கள். மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் வாயிலாக மாணவர்கள் சரியான நேரத்திற்கும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும் என மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.