நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று இரவு 10: 30 மணியளவில் சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி படப்பிடிப்பு தளத்தில் ‘இந்தியன் 2’ படத்திற்கு செட் அமைக்கும் பணி நடைபெற்ற போது, யாரும் எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஷங்கர் உதவியாளர் மது, இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல் ஹாசனும் இருந்துள்ளார். இந்த விபத்து திரையுலகத்தையே உலுக்கியுள்ளது. பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020
மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.
முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.
இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020