இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை. இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4ஆம் தேதியும், சரஸ்வதி 5 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதாலும் அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களும் வருவதால் இடையில் திங்கட்கிழமை மட்டும் பணியாளர்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் சென்னை போன்ற பெரு நகரங்களில் பணி நிமித்தமாக வசித்து வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை நாட்களில் பேருந்துக்களில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிவதால் அதனை பயன்படுத்த தனியார் ஆம்னி பேருந்துகள் பயணம் கட்டணம் என்ற பெயரில் பயணிகளிடமிருந்து பகல், இரவு கொள்ளை அடித்து வருகின்றனர்.
இந்த கட்டணம் கொள்ளையே தடுக்கக்கூடிய வகையில் பயணிகளின் வசதிக்காக தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆயுத பூஜைக்காக வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிஆகிய இரு தினங்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த குறிப்பிட்ட இரு தினங்களில் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2500 பேருந்துகளுடன் கூடுதலாக 2050 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதனைப் போல பிற நகரங்களில் இருந்து 1,650 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை தவிர்த்து தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட உள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.