பஞ்சாபில் இருக்கும் சிறை கைதிகளுக்கு அம்மாநில அரசு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அமைந்துள்ள சிறையில் கைதிகளுடைய திருமண உறவை வலுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதன்படி சிறையில் கைதிகள் தங்களுடைய மனைவிகளை அதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது மனைவியுடன் நேரத்தை கழிக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய அறையில் 2 மணி நேரம் கைதிகள் தங்கள் மனைவியுடன் தனிமையில் நேரத்தை கழிக்கலாம்.
மேலும் நல்லொழுக்கத்தோடு நடந்து கொள்ளும் கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை உண்டு எனவும் நீண்ட காலமாக சிறையிலேயே வசிக்கும் கைதிகளுக்கு இந்த சலுகையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொடூரமான குற்றம் செய்தவர்கள், தாதாக்கள், மிகவும் ஆபத்தான கைதிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோர்ருக்கு இதில் சலுகைகள் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தங்களுடைய கணவர்களை சந்திக்க செல்லும் மனைவிகள் திருமண மானதற்கான சான்று, மருத்துவ சான்று, எச்ஐவி இல்லா சான்று, பாலில் தொடர்பான நோயில்லாத சான்று, கொரோனா சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நாட்டிலேயே இந்த திட்டத்தை முதன் முறையாக இந்த மாநிலம் தொடங்கியுள்ளது என்ற பெருமை பெற்றுள்ளது.