சென்னை சோழிங்கநல்லூர் அருகில் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளிலுள்ள சதுப்பு நிலங்களை போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளுக்கு மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எச்.சி.சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநிலம் முழுதும் ஆக்கிரமிப்பிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள், சதுப்பு நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சதுப்பு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை கருணை இன்றி அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளிலுள்ள கட்டிடங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மின்சார இணைப்பு போன்றவற்றை துண்டிக்க வேண்டும். சதுப்புநிலங்களை போக்குவரத்து, சுற்றுலா துறைகளுக்கு மாற்றம் செய்யும் தமிழ்நாடு அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் டி.குமணன் மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். எதிர் மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்தவக்கீல் ஏ.சிராஜுதின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டினார். அதனை பதிவுசெய்து கொண்ட உச்சநீதிமன்றம், சதுப்புநிலங்களை மீட்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை முழுவீச்சுடன் செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.