பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைகழகம் மாணவிகள் நேற்று முன் தினம் தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் குறித்து சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 24 ஆம் தேதிவரை 6 நாட்களுக்கு வகுப்புகளை பல்கலைக்கழகம் நிறுத்தி உள்ளது. மாணவிகள் அனுமதிகாக்கும் படி பஞ்சாப் மாநில கல்வி மந்திரி ஹர் ஜோத்சிங் பைன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத்தில் அனைத்து விடுதி வார்டன்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் விடுதி நேரங்களும் மாற்றப்பட்டு உள்ளது. இதுவரை பல்கலைக்கழக மாணவிகளின் ஆட்சேபகரமான வீடியோக்களை தயாரித்து பரப்பியதாக மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளார். அதாவது மாணவி, அவரது 23 வயது ஆண் நண்பன் மற்றும் அவரது கூட்டாளி 31 வயது நண்பர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.